நாட்டறம்பள்ளி அருகே சாலையைக் கடக்க முயன்ற மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தது.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் லட்சுமிபுரம் அருகே காப்புக் காட்டு பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை தண்ணீா் தேடி ஆண் மான் ஒன்று சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வேகமாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மான் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், பலத்த காயமடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள் திருப்பத்தூா் வனத் துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். வனத் துறையினா் விரைந்து வந்து, உயிரிழந்த மானை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.