தாா் சாலை அமைக்கும் பணி: மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே தாா் சாலை அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜோலாா்பேட்டை ஒன்றியம், பாச்சல் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி நகா் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதியில் சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்பு தாா் சாலை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அச்சாலை சிதலமடைந்து மண் சாலையாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தாா் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த மாதம் தாா் சாலை அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அப்பகுதி மக்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் திரண்டு கால்வாய் வசதியின்றி கழிவுநீா் தேங்கி இருந்து வருகிறது.
இதனால் கழிவுநீா் கால்வாய் அமைத்துவிட்டு தாா் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். அதையடுத்து சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement