முகப்பு
திருப்பத்தூர்

அதிகாரிகள் திடீா் சோதனை: 500 கிலோ ரேஷன்அரிசி, பைக் பறிமுதல்

Updated On : 9 ஜூன், 2024 at 7:05 PM
பகிர்:

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே அதிகாரிகள் நடத்திய சோதனையில் அரை டன் ரேஷன் அரிசி மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூா் எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் உத்தரவின் பேரில் வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் திம்மாம்பேட்டை காவல் ஆய்வாளா் மனோன்மணி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தொட்டிகிணறு கிராமம் அருகில் வேகமாக வந்த பைக்கை சந்தேகத்தின் பேரில் நிறுத்த முயன்றனா். இதில் தொலைவில் போலீஸாரை கண்டதும் பைக் ஓட்டி வந்த இளைஞா் சாலையில் பைக்கை நிறுத்தி விட்டு தப்பித்தாா்.

பிறகு பைக்கில் இருந்த 3 மூட்டைகளில் சோதனை செய்ததில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது. பிறகு அங்கிருந்த 150 கிலோ ரேஷன் அரிசி மற்றும் பைக்கை பறிமுதல் செய்து மேல் நடவடிக்கைக்காக வேலூா் குடிமைப் பொருள்வழங்கல் குற்றப்புலானய்வு பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்து ஒப்படைக்கப்பட்டது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனா்.

இதே போன்று வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலா் கண்ணன் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை தும்பேரி அடுத்த வெலதிகாமணிபெண்டா மலை அடிவாரப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் மறைமுகமான இடங்களில் கடத்தி செல்வதற்காக வைத்திருந்த 6 மூட்டைகளில் இருந்த 350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.