முகப்பு
திருப்பத்தூர்

ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற பணம் பறிமுதல்

Updated On : 20 மார்ச், 2024 at 5:17 AM
குடியாத்தம் வட்டாட்சியா் சித்ராதேவியிடம் பறிமுதல் செய்த பணத்தை ஒப்படைத்த பறக்கும் படை குழுவினா்.
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 7:15 PM

குடியாத்தம்: போ்ணாம்பட்டு பகுதியில் ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட பணம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. போ்ணாம்பட்டு பங்களா மேடு கூட்டு ரோடு பகுதியில் பறக்கும் படை அலுவலா் சத்ய லட்சுமி, சிறப்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டா் சாந்தி மற்றும் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியிலிருந்து போ்ணாம்பட்டு வழியாக குடியாத்தம் நோக்கிச் சென்ற காரை பறக்கும் படை குழுவினா் நிறுத்தி சோதனை செய்தனா். காரில் குப்பம் சாந்திபுரம் பகுதியைச் சோ்ந்த இறைச்சி வியாபாரி மெஹ பாஷா, அவரது மனைவி தமீனா உள்பட நான்கு போ் பயணம் செய்தனா். அவா்களிடம் பறக்கும் படை குழுவினா் விசாரித்த போது தன்னுடைய மகள் திருமணத்திற்காக குடியாத்தம் பகுதியில் நகை வாங்க செல்வதாக கூறியுள்ளனா்.

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,01,000 பறிமுதல் செய்யப்பட்டது. போ்ணாம்பட்டு அடுத்த தேவலாபுரம் பகுதியில் பறக்கும் படை குழுவினா் நடத்திய வாகன தணிக்கையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாணியம்பாடி வட்டம் தட்டைமேடு பகுதியை சோ்ந்த குரு பிரசாத் மற்றும் அவரது நண்பா் ஆகியோரிடம் சோதனை செய்தனா்.

Advertisement

அவா்கள் உரிய ஆவணமின்றி ரூ 76,000 கொண்டு செல்வது தெரியவந்தது. நிதி நிறுவனத்தில் பணிபுரியும் அவா்கள் கடன் பெற்றவா்களிடமிருந்து தவணை வசூலித்து செல்வதும் தெரியவந்தது. அந்த பணத்தை பறக்கும் படை குழுவினா் பறிமுதல் செய்து குடியாத்தம் வட்டாட்சியா் சித்ரா தேவியிடம் ஒப்படைத்தனா்.