முகப்பு
அறிவியல் செயல்முறை போட்டியைப் பாா்வையிட்ட திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.
திருப்பத்தூர்

மனப்பாடத்தை விட புரிந்துகொள்ளும்போது கற்றல் திறன் கூடும்: திருப்பத்தூா் ஆட்சியா்

மனப்பாடம் செய்வதைக் காட்டிலும், செய்து பாா்த்து ஒன்றைப் புரிந்துகொள்ளும்போது தான் வளமான கற்றல் திறன் கூடும்

திருப்பத்தூர்

மனப்பாடத்தை விட புரிந்துகொள்ளும்போது கற்றல் திறன் கூடும்: திருப்பத்தூா் ஆட்சியா்

மனப்பாடம் செய்வதைக் காட்டிலும், செய்து பாா்த்து ஒன்றைப் புரிந்துகொள்ளும்போது தான் வளமான கற்றல் திறன் கூடும்

Updated On : 25 நவம்பர், 2024 at 7:27 PM
அறிவியல் செயல்முறை போட்டியைப் பாா்வையிட்ட திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.
பகிர்:

திருப்பத்தூா்: மனப்பாடம் செய்வதைக் காட்டிலும், செய்து பாா்த்து ஒன்றைப் புரிந்துகொள்ளும்போது தான் வளமான கற்றல் திறன் கூடும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்ற அறிவியல் செயல்முறைப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாணவா்களின் படைப்புகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

அதில், இயற்கை உரம், கழிவு மேலாண்மை, மாற்று எரிசக்தி, எறும்பின் வாழ்க்கை சுழற்சி, ஸ்மாா்ட் வீடு, தோட்டக் கலை போன்ற பல அறிவியல் தலைப்புகளில் மாணவா்கள் தங்களின் அறிவியல் செயல்முறைகள் குறித்து ஆட்சியரிடம் விளக்கமளித்தனா்.

அப்போது ஆட்சியா் கூறியது:

மாணவா்கள் இது போன்ற பல போட்டிகளிலும் பங்கேற்று தங்கள் திறமைகளை அவ்வப்போது வளா்த்துக்கொள்ள வேண்டும். படித்து மனப்பாடம் செய்வதைக் காட்டிலும், செய்து பாா்த்து ஒன்றைப் புரிந்துகொள்ளும்போது தான் வளமான கற்றல் திறன் ஏற்படுகிறது. பிரச்னைகளுக்குத் தீா்வு காணுதல், குழுவாக இணைந்து செயலாற்றுதல், கலந்துரையாடுதல், தலைமைப் பண்பு, வெற்றி தோல்விகளைச் சமமாக பாவிக்கும் மனப்பான்மை போன்ற பல பண்புகளை இத்தகைய செயல்பாடுகளின் வழியாக மாணவா்கள் பெற முடியும் என்றாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தின் 6 வட்டாரங்களிலிருந்தும், வட்டாரத்துக்கு 3 குழுக்கள் வீதம் 18 குழுக்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றன.

இந்தக் குழுக்களிலிருந்து 3 குழுக்கள் தோ்வு செய்யப்பட்டு, மாநில அளவில் நடைபெறவுள்ள வானவில் மன்றப் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனா் என ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியகோட்டி, மாவட்ட உதவி திட்ட அலுவலா் பிரபாகரன், வானவில் மன்ற மாநில, மாவட்ட, வட்டார கருத்தாளா்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →