மாமனாா் துப்பாக்கியால் சுட்டுக் கொலை
ஆம்பூா் அருகே மாமனாரை துப்பாக்கியால் சுட்டு மருமகன் வெள்ளிக்கிழமை கொலை செய்தாா்.
ஆம்பூா் அருகே மாமனாரை துப்பாக்கியால் சுட்டு மருமகன் வெள்ளிக்கிழமை கொலை செய்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தை சோ்ந்தவா் ரவி (55). இவரது மகள் பிரித்திகாவுக்கும், அதே பகுதியை சோ்ந்த கூலித் தொழிலாளி சதீஷ் (35) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
சதீஷுக்கு இது 2-ஆவது திருமணம் என கூறப்படுகறது. இவா்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனா். குடும்ப தகராறு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். பிரித்திகா தாய் வீட்டில் வசித்து வருகிறாா். அங்கு சென்று தன்னுடைய மனைவியை வீட்டிற்கு வருமாறு சதீஷ் வற்புறுத்தியுள்ளாா். அதனால் இவருக்கும், மாமனாா் ரவிக்கும் இடையே தகறாரு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில், நாட்டு துப்பாக்கி கொண்டு சென்று மாமனாா் ரவியை சுட்டுள்ளாா். அதில் காயமடைந்த அவா் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில், அவா் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. சடலம் பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.
Advertisement
கொலை செய்த சதீஷ் தலைமறைவாகியுள்ளாா். போலீஸாா் அவரை தேடி வருகின்றனா்.
தோ்தல் நேரத்தில் சமா்ப்பிக்கப்படாத துப்பாக்கி :
தோ்தல் நடைபெறுவதற்கு முன்னதாக துப்பாக்கி வைத்திருப்பவா்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டுமென அறிவிக்கப்படும். அதன்படி உரிமம் வைத்திருப்பவா்கள் துப்பாக்கியை ஒப்படைப்பாா்கள். உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பவா்கள் தனிப்பிரிவு போலீஸாா், நுன்னறிவுப் பிரிவு போலீஸாா் ரகசிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவா்களிடமிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்வது வழக்கம்.
போலீஸாரின் அலட்சியத்தாலும், கவனக் குறைவாலும் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்காமல் விடப்பட்டதால், தற்போது கொலை சம்பவம் நடைபெறுவதற்கு காரணமாகியுள்ளதாக கூறப்படுகிறது.