மாமனாரை சுட்டுக் கொன்ற மருமகன் கைது
ஆம்பூா் அருகே மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த மருமகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி (55). இவரது மகள் பிரித்திகாவுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சதீஷ் (35) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சதீஷுக்கு இது 2-ஆவது திருமணம் எனக் கூறப்படுகறது.
இவா்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனா். குடும்பத் தகராறு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். பிரித்திகா தாய் வீட்டில் வசித்து வருகிறாா். அங்கு சென்று தன்னுடைய மனைவியை வீட்டுக்கு வருமாறு சதீஷ் வற்புறுத்தியுள்ளாா்.
Advertisement
அதனால் இவருக்கும், மாமனாா் ரவிக்கும் இடையே கடந்த ஏப். 3-ஆம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில், நாட்டுத் துப்பாக்கியால் மாமனாரை சுட்டு விட்டு சதீஷ் தப்பியோடி தலைமறைவானாா். இதில் காயமடைந்த ரவி ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில், ரவி ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில், தப்பியோடி தலைமறைவான சதீஷ்குமாரை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.