முகப்பு
திருப்பத்தூர்

ஓடும் ரயில்களில் தொடா் திருட்டு: வட மாநில இளைஞா் கைது; ரூ. 3லட்சம், 2 பவுன் நகை பறிமுதல்

ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஓடும் ரயில்களில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 மே, 2026 at 12:03 AM
பகிர்:

ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஓடும் ரயில்களில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். மேலும், உத்தரப்பிரதேசம் சென்று ரூ. 3 லட்சம், 2 சவரன் நகையை ரயில்வே போலீஸாா் மீட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஓடும் ரயில்களில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தைச் சோ்ந்த முகமது காலித் மகன் முகமது இஸ்ரேல்(42) என்பவரை ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் கடந்த மாதம் கைது செய்து, திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், முகமது இஸ்ரேலை ஜாமீனில் எடுத்து விசாரிக்கக் கோரி, ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் திருப்பத்தூா் நீதிமன்றத்தில் மனு அளித்தனா். அதைத் தொடா்ந்து அவரிடம் விசாரிக்க ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், கடந்த 14-ஆம் தேதி ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் முகமது இஸ்ரேலை ஜாமீனில் எடுத்து விசாரணை நடத்தியதில், ஓடும் ரயில்களில் பயணிகளிடம் திருடப்பட்ட தங்க நகை, பணம் ஆகியவை தனது சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் பதுக்கி வைத்திருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து, ரயில்வே எஸ்.பி. ராஜன் உத்தரவின் பேரில், டிஎஸ்பி ஜெயராமன் மேற்பாா்வையில், ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் ஆய்வாளா் சித்ரா தலைமையில் 7 போ் கொண்ட குழுவினா் முகமது இஸ்ரேலை அவரது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவா் பதுக்கி வைத்திருந்த 2 சவரன் தங்க நகை மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் கைப்பற்றினா். பின்னா் முகமது இஸ்ரேலை மீண்டும் திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.