திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வழக்குரைஞர் தீக்குளித்து சாவு
திருவள்ளூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற வழக்குரைஞர், திடீரென திருமண மண்டபத்திலேயே தீக்குளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.
திருவள்ளூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற வழக்குரைஞர், திடீரென திருமண மண்டபத்திலேயே தீக்குளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் தொழுவூர் கிராமம் காமராஜர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் ரங்கநாதன் (35) (படம்). திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ளார். இவரது மனைவி விஜயகுமாரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ளார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் திருவள்ளூரில் ஆயில் மில் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் சதாசிவம் என்பவரது இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இரவு 10 மணியளவில் ரங்கநாதன் வந்தார். திருமண வரவேற்பு நிகழ்ச்சி நிறைவடையும் தறுவாயில், ரங்கநாதன் திடீரென தனது உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதனைக் கண்டு, திருமணத்துக்கு வந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். திருமண வீட்டாரும், வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தோரும் இந்த திடீர் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தனர்.
சிலர் ஓடிச்சென்று தீயை அணைத்து, ரங்கநாதனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சனிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ரங்கநாதன் தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன, அவருக்கும் சதாசிவத்திற்கும் என்ன தொடர்பு என்று போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.