பொதுமக்களின் புகார் மீது உடனடி நடவடிக்கை: ஆட்சியர் அதிரடி
திருவள்ளூர் அருகே பொதுமக்கள் அளித்த புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர் எ.சுந்தரவல்லிக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
திருவள்ளூர் அருகே பொதுமக்கள் அளித்த புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர் எ.சுந்தரவல்லிக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், ஈக்காடு ஊராட்சியில் டெங்கு மற்றும் தொற்று நோய் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஆட்சியர் எ.சுந்தரவல்லி வியாழக்கிழமை சென்றார். அப்போது, வீடுகள் தோறும் சென்று சுகாதாரக் கேடுகள் உள்ளனவா என்பது குறித்து பார்வையிட்டார். அப்போது, அங்கு கூடிய பொதுமக்கள், இன்னும் மழை நீர் வடியாமல் இருப்பதாகவும், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதாகவும், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சிலர் மாடுகளை திரிய விடுவதாகவும் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சந்தானம் ஆகியோரிடம் உடனே மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு குடியிருப்புகள் மற்றும் தெருக்களில் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தேங்கியிருந்த வெள்ள நீர் அகற்றப்பட்டது.
அதேபோல், சாய்ந்த மின்கம்பங்களுக்குப் பதிலாக 2 புதிய மின்கம்பங்களும் நடப்பட்டு, மின் விநியோகமும் அளிக்கப்பட்டது. அங்குள்ள சாலையில் குண்டும், குழியுமாக இருந்த பகுதிகளில் மண்கொட்டி சமப்படுத்தப்பட்டது. அடுத்து, சாலையில் சுற்றித் திரிந்த 17 மாடுகளை அப்புறப்படுத்தி, அந்த மாடுகளை திருவாலங்காடு கோசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர், கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் குடியிருப்பின் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல், கிராம மக்கள் மாடுகளை போக்குவரத்துக்கு இடையூராக விடாமல் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், தூய்மை சுகாதாரப் பணியாளர்கள் நாள்தோறும் குப்பைகளை அகற்றவும் ஆட்சியர் வலியுறுத்தினார்.
அப்போது பொதுமக்கள் நேரடியாக தெரிவித்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த ஆட்சியருக்கு ஈக்காடு கிராமத்தினர் நன்றியை தெரிவித்தனர்.
சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரபாகரன், அரசு அலுவலர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.