சாலை விதிகள் பயிற்சி சான்று இருந்தால் மட்டுமே இனி புதிய வாகனங்கள் பதிவு: போக்குவரத்து அதிகாரி தகவல்
சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே இனி புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படும் என செங்குன்றம் வட்டார போக்குவரத்து அதிகாரி சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.
சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே இனி புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படும் என செங்குன்றம் வட்டார போக்குவரத்து அதிகாரி சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஆணையரின் உத்தரவின்பேரில் சாலை விபத்துகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்துகளில் இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள் அதிகமாக உயரிழந்துள்ளனர்.
இதனால், வாகனங்கள் விற்பனை செய்யும் முகவர்கள், இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த மையங்கள் அமைத்து அவர்களுக்கு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கப்படும். இனி, அச்சான்றுடன் வந்தால் மட்டுமே புதிய வாகனம் பதிவு செய்யப்படும் என்ற நடைமுறை புதன் கிழமை முதல் செயல்படுத்தப்படுகிறது. இதையடுத்து, செங்குன்றத்தில் உள்ள 7க்கும் மேற்பட்ட முகவர்களிடம் செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி கோ.சம்பத்குமார் மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் உள்ளிட்டோர் இதற்கான மாதிரிப் படிவங்களை வழங்கினர்.
இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரி சம்பத்குமார் கூறியதாவது: தமிழகத்தில் ஆண்டுதோறும் விபத்துகளால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு இருசக்கர வாகன விபத்தில் 5,666 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துகளைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது புதிய வாகனங்கள் பதிவு செய்ய வருபவர்களுக்கு சாலை விதிகள் குறித்தும், சாலைப் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் விபத்துகளைத் தடுக்க வாய்ப்புள்ளது.
வாகனம் விற்பனை செய்யும் முகவர்கள், வாகனம் வாங்குவோருக்குப் பயிற்சி அளித்து சான்று வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சான்றுடன் வருபவர்களின் வாகனங்கள் மட்டுமே இனி பதிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.