கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலம்பேடு ஊராட்சிக்கு உள்பட்ட அமரம்பேடு அமிர்தமங்கலம் 'அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுமக்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது.
முகாமுக்கு கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ராஜகோபால் தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அற்புதராஜ், முன்னாள் ஊராட்சித் தலைவர் லோகாம்பாள் கருணாகரன், கிராம நிர்வாக அலுவலர் கே.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தனி வட்டாட்சியர் மல்லிகா, வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஷர்மிளா, சூர்யபிரகாஷ் உள்ளிட்ட வருவாய்த் துறையினரிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 32 மனுக்களை அளித்தனர். இதில் தகுதிவாய்ந்த 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
மேலும், இம்முகாமில், தமிழக அரசின் சார்பாக ஹாசினி கண் மருத்துவமனை மருத்துவர் விஜயலட்சுமி, கண் பரிசோதகர் கனகராஜ் ஆகியோர் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக கண் பரிசோதனை செய்தனர். இதில், கண் புரை அறுவை சிகிச்சை தேவைப்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.