பிளஸ் 2 பொதுத்தேர்வு கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்பு
பிளஸ் 2 பொதுத் தேர்வில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் தேர்வுப் பணிக்கான ஆணைகளை மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி வியாழக்கிழமை வழங்கினார்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் தேர்வுப் பணிக்கான ஆணைகளை மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி வியாழக்கிழமை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் மார்ச் 1 முதல் ஏப்ரல் 6 வரையில் பிளஸ் 2 தேர்வுகளும், மார்ச் 7 முதல் ஏப்ரல் 16 வரை பிளஸ் 1 தேர்வுகளும் நடைபெற உள்ளன.
இத்தேர்வுகளில் பங்கேற்க உள்ள வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள், உதவி வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் ஆகியோரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் கடந்த சில நாள்களுக்கு முன்பு நியமனம் செய்தார். இந்நிலையில், நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் மற்றும் வழித்தட அலுவலர்கள், பறக்கும் படை உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணிக்கான ஆணைகளை வழங்கினார்.
திருமுல்லைவாயலில்
அதேபோல் திருமுல்லைவாயல், மங்களம் சி.பி.எஸ்சி. பள்ளியில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்திற்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் தேர்வுப் பணிகள் குறித்து ஆசிரியர்களிடம் அவர் விளக்கினார். நிகழ்வில், அனைத்துத் தேர்வுப் பணியாளர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிக்கான கையேட்டு நகலுடன் கலந்துகொண்டனர்.