தனியார் வீடு கட்டுவதால் போக்குவரத்துக்கு இடையூறு: கிராம மக்கள் சாலை மறியல்
குறுகிய சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டுவதால் பேருந்து வந்து செல்வதற்கு இடையூறு ஏற்படும் எனக் கூறி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குறுகிய சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டுவதால் பேருந்து வந்து செல்வதற்கு இடையூறு ஏற்படும் எனக் கூறி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருத்தணி ஒன்றியம் சிறுகுமி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகனம்மா(46). இவர், சாலையை ஆக்கிரமித்து புதியதாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து, தனியார் வீடு கட்டுவதை நிறுத்த வேண்டும். குறுகிய சாலையில் வீடு கட்டினால், இவ்வழியாக பேருந்துகள் செல்ல முடியாது என கோஷங்களை எழுப்பினர்.
தகவல் அறிந்து வந்த திருத்தணி டி.எஸ்.பி. சேகர், திருத்தணி வட்டாட்சியர் செங்கலா, துணை வட்டாட்சியர் மணிவாசகம், வருவாய் ஆய்வாளர் சாமுண்டீஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் ரகுவரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, வீடு கட்டும் இடம் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம் என்றும், பேருந்துகள் செல்வதற்கு வசதியாக பத்து அடி நிலத்தை இலவசமாக கொடுத்துள்ளதாகவும் நில உரிமையாளர் மோகனம்மா கூறினார்.
இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.