மாணவர்களுக்கு ஒழுக்கத்துடனான கல்வியே இக்கால கட்டத்தில் அவசியம் என்று மேகாலய முன்னாள் ஆளுநர் வி.சண்முகநாதன் கூறினார்.
கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் மகாராஜா அக்ரசன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 16-ஆவது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளி நிறுவன அறங்காவலர் ஸ்ரீகிஷன் ஷெராப் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கே.சுப்பையா வரவேற்றார்.
விழாவுக்கு, வட்டாரக் கல்வி அலுவலர்கள் பூவராகமூர்த்தி, முனிராஜசேகர், பள்ளி அறங்காவலர்கள் சுனில் ஷெராப், அனில் ஷெராப், சுஷீல் ஷெராப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், மேகாலய மாநில முன்னாள் ஆளுநர் வி.சண்முகநாதன் பங்கேற்றுப் பேசுகையில், இன்றைய சூழலில் மாணவர்களுக்கு ஒழுக்கத்துடனான கல்வி நம் நாட்டில் தேவை.
ஒவ்வொரு மாணவரின் வளர்ச்சியும் அவரிடமே உள்ளது. அதை நிர்மாணித்துக் கொள்ள அவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.