ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பொன்னேரியில் திருவள்ளூர், நெல்லூர், சித்தூர் மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமா-அத் ஒருங்கிணைப்பு கமிட்டி சார்பில் சனிக்கிழமை ஊர்வலம் நடத்தி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் அண்மையில் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து முஸ்லிம் ஜமா-அத் ஒருங்கிணைப்பு கமிட்டி சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஊர்வலம், பொன்னேரி மதீனா பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு பழைய பேருந்து நிலையம், தேரடித் தெரு, புதிய பேருந்கு நிலையம், திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாகச் சென்று பள்ளிவாசலில் நிறைவடைந்தது.
இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர். ஊர்வலத்தில் திருவள்ளூர், நெல்லூர், சித்தூர் பகுதிகளில் இருந்து வந்திருந்த ஜமா-அத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.