முகப்பு
திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டியில் மூவர் கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது

கும்மிடிப்பூண்டியில் கல்லூரி மாணவர் ஆகாஷ் உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கில் செவ்வாய்க்கிழமை மேலும்  ஒருவர் செய்யப்பட்டார்.

Updated On : 23 ஜனவரி 2019, 6:17 am IST
பகிர்:

கும்மிடிப்பூண்டியில் கல்லூரி மாணவர் ஆகாஷ் உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கில் செவ்வாய்க்கிழமை மேலும்  ஒருவர் செய்யப்பட்டார்.
கும்மிடிப்பூண்டியைச்  சேர்ந்தவர் ஆகாஷ் (17). கல்லூரி மாணவரான அவர் கடந்த சனிக்கிழமை இரவு தனது நண்பர்களான விமல்(21), சதீஷ்(26) ஆகியோருடன் ம.பொ.சி. நகர் அருகே பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்மக் கும்பல் அவர்கள் 3 பேரையும்  வெட்டியது. இதில் ஆகாஷ், விமல், சதீஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.  இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ம.பொ.சி. நகரில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் போலீஸார் துப்பு துலக்கினர்.
இந்நிலையில், இந்தக் கொலை தொடர்பாக புது கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி நடராஜ் மற்றும் பாஸ்கர், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த நாகராஜ், சித்தராஜகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார், ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மாதவன் ஆகிய 5 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, ஆத்துப்பாக்கம் திடீர் நகரைச் சேர்ந்த கோபி என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரையும் பாதிரிவேடு காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்கள் கூறியது:
கடந்த ஆண்டு ம.பொ.சி. நகரைச் சேர்ந்த ஷாஜகான் என்பவர் மின்சார ரயிலில் பொருள்களை விற்பனை செய்வது தொடர்பான தகராறில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் விமலும், சதீஷும் குற்றவாளிகள் ஆவர். இதனிடையே சிறைக்கு சென்று வந்த விமலும், சதீஷும் கஞ்சா விற்பனை செய்யும் எங்களிடம் மாமூல் கேட்டு மிரட்டி வந்தனர். மேலும் எங்களுக்குப் போட்டியாக அவர்களும் கஞ்சா விற்பனை செய்து வந்தனர். அவர்களுடன் கல்லூரி மாணவரான ஆகாஷும் சேர்ந்து கொண்டார். 
அதனால் இந்த 3 பேரையும்  கொலை செய்யத் திட்டமிட்டோம். அதன்படி, மூவரையும் கொலை செய்து விட்டு கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் தயாராக நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டோம் என 6 பேரும் விசாரணையில் தெரிவித்தனர். 
இதனிடையே, கொலைக்குப் பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை ஆரம்பாக்கம் அருகே உள்ள புதரில் போலீஸார் மீட்டனர். இந்தக் கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளது என தெரிய வந்துள்ளது. தலைமறைவாகி உள்ள அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.