மாதவரம் அருகே சுங்கச்சாவடி ஊழியர்களைக் கண்டித்து, லாரி ஓட்டுநர்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை மாதவரம்-மணலி சாலையில் உள்ள சுங்கச் சாவடியில் ஊழியர்கள் சனிக்கிழமை லாரிகளுக்கான கட்டணமாக ரூ. 55, ரூ. 140 முதல் ரூ.170 வரை வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, லாரி ஓட்டுநர்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இந்நிலையில், சுங்கச்சாவடி ஊழியர் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, அங்குவந்த போலீஸார், வாக்குவாதத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர்கள், காவல் துறை, சுங்கச்சாவடி ஊழியர்களைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், ஓட்டுநர்கள் காவல் ஆய்வாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, ஓட்டுநர்கள் விடுவிக்கப்பட்டனர். பின்னர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.