திமுக தலைமையிலான கூட்டணி கொள்கை அடிப்படையில் அமைந்துள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து பொன்னேரி ஹரிஹரன் கடை வீதியில் வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியது:
வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான விவசாயக் கடன்களை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தள்ளுபடி செய்தார். அதேபோல், தமிழகத்தில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி ரூ.2 ஆயிரம் கோடிமதிப்பிலான விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தார்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் அண்மையில் அமைந்த காங்கிரஸ் அரசுகள், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தன. அதேபோல், தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரானால் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கே.எஸ்.அழகிரி பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.