மாதவரம் அருகே சாலையின் குறுக்கே வந்த மாடு மீது இரு சக்கர வாகனம் மோதியதில் உணவக உரிமையாளர் உயிரிழந்தார்.
சென்னை, மணலி புதுநகரைச் சேர்ந்தவர் அய்யனார் (45). மாதவரம் அருகே மஞ்சம்பாக்கத்தில் உணவகம் நடத்தி வந்தார். கடந்த புதன்கிழமை இரவு மணலி எம்எப்எல் சந்திப்பில் இருந்து மணலி புதுநகருக்கு தனது சகோதரருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஆண்டார்குப்பம் சந்திப்பு அருகே வந்தபோது, திடீரென சாலையின் குறுக்கே வந்த மாடு மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அய்யனார் மற்றும் அவரது சகோதரர் மீட்கப்பட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அய்யனார் சனிக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.