பொன்னேரியில் உள்ள மீன்வளக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் புதன்கிழமை வாபஸ் பெறப்பட்டது.
நாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் பொன்னேரியில் உள்ள மீன்வளக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தனியார் மீன்வளக் கல்லூரி தொடங்க மீன்வளப் பல்கலைக்கழகம் அனுமதி அளித்தது. இதையடுத்து, தனியார் சுயநிதிக் கல்லூரிக்கு அளித்த அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி, பொன்னேரியில் உள்ள மீன்வளக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கடந்த 3 நாள்களாக வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இதேபோல் தூத்துக்குடி, நாகப்பட்டினத்திலும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, போராட்டம் நடத்தினர். இந்நிலையில், மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், சுயநிதிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடர்பாக குழு அமைப்பது எனவும், 11 மாணவர்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்படும் எனவும் கூறியதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை மாணவர்கள் கல்லூரிக்குச் சென்றனர்.