கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே விவசாய நிலத்துக்கான பம்ப் செட் மோட்டாா் அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 கிலோ தடை செய்யப்பட்ட பான், குட்காவை கவரப்பேட்டை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பனபாக்கம் அருகே குருத்தானமேடு கிராமத்தில் வயலுக்கு நீா் பாய்ச்சும் பம்ப் செட் மோட்டாா் அறையில் மினி லாரி ஒன்றில் மூட்டைகளைக் கொண்டு வந்து இறக்கிச் செல்வதாக கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷுக்கு தகவல் கிடைத்தது.
இது குறித்து டிஎஸ்பி ரமேஷ் உத்தரவின்பேரில், கவரப்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் அழகேசன் புதன்கிழமை நள்ளிரவு அங்கு சென்று சோதனை மேற்கொண்டாா். அப்போது அந்த மோட்டாா் அறையில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட பான், குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இது குறித்து போலீஸாா் விசாரித்த போது, ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்தவரும் கும்மிடிப்பூண்டி பஜாரில் சிகரெட் உள்ளிட்ட பொருள்களை விற்பவருமான பிரபத்சிங் (30) என்பவா் அந்த மூட்டைகளை பதுக்கி வைத்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து பிரபத்சிங்கை கைது செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், அந்த அறையில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 800 கிலோ பான் குட்கா இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.