திருவள்ளூரில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் மையத்தில் முதியவருக்கு உதவி செய்வது போல் நடித்து அட்டையை மாற்றி ரூ.60 ஆயிரம் மோசடி செய்த நபர் குறித்து நகர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து திருவள்ளூர் கிராமிய காவல் நிலைய காவலர்கள் தரப்பில் வியாழக்கிழமை கூறியதாவது. திருவள்ளூர் அருகே ஒதிக்காடு மாதா கோயில் தெருவைச் சேர்ந்த முதியவர் டேவிட்(64). இவர் திருவள்ளூர் ஜி.என்.சாலையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் மையத்திற்கு கடந்த செப்.9 இல் பணம் எடுக்கச் சென்றாராம்.
அப்போது, ஏடிஎம் அட்டையை இயந்திரத்தில் செலுத்திய நிலையில் பணம் வரவில்லையாம். அப்போது பின்புறமாக நின்றிருந்த நபர் ஒருவர் முதியவருக்கு வலிய வந்து உதவி செய்வது போல் இயந்திரத்தில் அட்டை செலுத்தி ரகசிய எண் கேட்டு பதிவு செய்தள்ளார். ஆனால் அப்போதும் பணம் எதுவும் வரவில்லையாம். இந்த நிலையில் அந்த மர்ம நபர் அட்டையை வைத்துக் கொண்டு வேறொரு அட்டை அவரிடம் அளித்ததால், அதை அறியாமல் வாங்கிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் வங்கி கணக்கை சரிபார்த்த போது ரூ.60 ஆயிரம் வரையில் குறைந்துள்ளது. அப்போதுதான் யாரோ மர்ம நபர் ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்துவிட்டு பணம் எடுத்துள்ளதும் தெரியவந்தது. இதன் பேரில் திருவள்ளூர் நகர் காவல் நிலையத்தில் டேவிட் புகார் செய்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அன்றைய நாளில் கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை வைத்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.