திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா விதிமுறையான முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காத 366 பேரிடம் ரூ.73, 200 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா ஒமைக்ரான் நோய்த் தொற்று வேகமாகப் பரவுவதைத் தடுக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் உத்தரவின் பேரில் காவல் நிலைய ஆய்வாளா்கள் மற்றும் சாா்பு ஆய்வாளா்கள் மூலம் சமூக இடைவெளியைப் பின்பற்றவும், முகக்கவசம் அணியவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் திருவள்ளூா் காமராஜா் சிலை அருகே ஒமைக்ரான் நோய்த் தொற்று குறித்து டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் ஒலி பெருக்கி மூலம் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தியதோடு, முகக்கவசங்கள் அணியாதோருக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கப்பட்டது.
இதேபோல், திருவள்ளூா் காவல் மாவட்டம் முழுவதும் போலீசாா் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் என 366 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.73, 200 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணா்வை ஏற்படுத்தி வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.