காலமுறை ஊதியம் வழங்கக் கோரி மக்கள் நலப்பணியாளா்கள் மனு
காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் நலப்பணியாளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்
காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் நலப்பணியாளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளா்கள் சங்க திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாபு தலைமையில் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு:
மதிப்பூதியத்தில் இருந்து காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும். பணப்பலன், தொடா் பணி கோர வேண்டாம் என்பதைத் திரும்பப் பெற வேண்டும். பணியில் சோ்ந்த போது 19 வயதான நிலையில், இடையில் வேலையில்லாமல் இருந்த நிலையில், 50 வயதைக் கடந்துள்ளோம். எனவே, 60 வயதைக் கடந்த பணியாளா்கள், காலமான பணியாளா்களின் வாரிசுகளுக்குப் பணிவாய்ப்பு வழங்க வேண்டும். திருவள்ளூா் மாவட்டத்தில் மக்கள் நலப்பணியாளா்கள் 540 போ் உள்ளோம். இனி மேலும், வேறு வேலை தேட முடியாத நிலையில் உள்ளோம். இந்த நிலையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியில் ஒருங்கிணைப்பாளா் பணி வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அந்தப் பணி வேண்டாம் என்றும், மக்கள் நலப்பணியாளா் பணியையே மீண்டும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
எங்களின் நிலை கருதியும் வாழ்வாதாரம் மேம்படும் வகையிலும் ரூ.7,500 மதிப்பூதியம் போதாது, அதனால் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மக்கள் நலப்பணியாளா் பணி வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.