அதிமுக கூட்டணிக்கு புரட்சி பாரதம் ஆதரவு: ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ
மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு புரட்சி பாரதம் ஆதரவு அளிக்கும் என அந்தக் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ புதன்கிழமை தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புரட்சி பாரதம் கட்சிக்கு திருவள்ளுர் அல்லது விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், புரட்சி பாரதம் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட தொகுதிகள் ஏதும் ஒதுக்கப்படாததால், அந்தக் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர்.
இதையடுத்து கடந்த வாரம் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பது குறித்து 2 நாள்களில் முடிவு தெரிவிப்பதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெகன்மூர்த்தி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டங்களிலும் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வந்தனர்.
இந்த நிலையில் புதன்கிழமை பூந்தமல்லியில் அந்தக் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்களவைத் தேர்தலில் எங்களுக்கு தொகுதி ஒதுக்காத நிலையில், மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதில், 90 சதவீத தொண்டர்கள் அதிமுகவுடன் பயணிக்கலாம் என்று வலியுறுத்தினர்.
எனவே, மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பளிக்க உறுதியளித்ததன் பேரில் இந்த ஆதரவு தொடரும் என்றும் கூறினார்.
மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுகவினருடன் இணைந்து புரட்சி பாரதம் நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு, அதிமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு உந்து சக்தியாக பாடுபடுவோம்.
அடுத்த மக்களவைத் தேர்தலில் புரட்சி பாரதம் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.