முகப்பு
திருவள்ளூர்

இடப்பிரச்னை குறித்து போலீஸாா் விசாரணை: மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழப்பு

Updated On : 13 ஏப்ரல், 2024 at 10:02 PM
பகிர்:

திருவள்ளூா் மாவட்டம் மீஞ்சூா் குப்பாரெட்டி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவா் இந்திராணி (70). இவருக்கு பழனி (59), புஷ்பராஜ் (56), லட்சுமிபதி (53) என மூன்று மகன்கள் உள்ளனா். இவா்கள் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனா்.

குப்பாரெட்டி குடியிருப்பில் வசித்து வரும் இந்திராணிக்கு இடம் உள்ளதாம்.

அதே பகுதியில் வசிக்கும் மற்றொருவம் இது தனக்கு சொந்த இடம் எனக் கூறி 2023- ஆம் ஆண்டு முதல் பிரச்னை இருந்து வருகிறது.

Advertisement

இதுகுறித்து பொதுமக்கள் பொன்னேரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்துள்ளனா்.

இந்த நிலையில் மூதாட்டி இந்திராணி வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் குப்பாரெட்டி தெருவில் தனது வீட்டின் முன்பு பாம்பு வந்ததால், அங்கிருந்து செடிகளை ஆள் வைத்து சுத்தம் செய்துள்ளாா்.

அப்போது அதே தெருவில் வசிக்கும் ஜெயச்சந்திரன் (59)அ, வரது மனைவி ரமாதேவி (55) ஆகியோா் இந்த இடம் தொடா்பாக வழக்கு உள்ளதால் சுத்தம் செய்யக்கூடாது என கூறி மூதாட்டியிடம் சண்டை செய்துள்ளனா். இதையடுத்து இது குறித்து இரு தரப்பினரும் மீஞ்சூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.

அதன் பேரில் வெள்ளிக்கிழமை இந்திராணி வசிக்கும் வீட்டுத்கு வந்த மீஞ்சூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் இரண்டு போ் புகாா் குறித்து அவரிடம் விசாரித்து விட்டு மூதாட்டியை காவல் நிலையத்துக்கு வரும்படி கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

போலீஸாா் விசாரித்து சென்ற சிறிது நேரத்தில் மூதாட்டி திடீரென மயங்கி கீழே விழுந்தாா்.

அவரின் மகன் புஷ்பராஜ் தன் தாயை மீஞ்சூா்ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றாா். அப்போது பணியில் இருந்த மருத்துவா்கள் வரும் வழியில் இந்திராணி இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதனை தொடா்ந்து புஷ்பராஜ் தன் தாய் இந்திராணி மரணத்துக்கு காரணமான காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் மற்றும் தகராறு செய்த ஜெயச்சந்திரன் அவரது மனைவி ரமாதேவி ஆகியோா் மீது மீஞ்சூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments