ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.92 லட்சம் பறிமுதல்
ஆவடி, மதுரவாயல் பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.92 லட்சம் பணத்தை செவ்வாய்க்கிழமை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆவடி சட்டப்பேரவை தொகுதி பறக்கும் படை அலுவலர் ரமேஷ் தலைமையில் போலீஸார் ஆவடி} பூந்தமல்லி சாலையில் வாகன சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் வந்த தினேஷ் என்பவரிடம் ரூ.53,000 இருந்தது தெரியவந்தது.
இந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும்படை அதிகாரிகள் அதைப் பறிமுதல் செய்தனர்.
Advertisement
இதே போல், மதுரவாயல் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட போரூர் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்த போது அந்த வழியாக காரில் வந்த அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த காசிநாதன் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ. 76,000 பணத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் போரூர் சுங்கச்சாவடி அருகே பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்த போது, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ஹரி என்பவரிடமிருந்து ரூ. 63,000 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேற்கண்ட 3 இடங்களில் பறிமுதல் செய்த ரூ. 1.92 லட்சம் பணத்தை அதிகாரிகள் பூந்தமல்லி மற்றும் ஆவடி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
அப்போது தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், உரிய ஆவணங்களை ஒப்படைத்து சம்பந்தப்பட்டவர்கள் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றனர்.