பூந்தமல்லி அருகே தகாத உறவு வைத்திருந்த பெண்ணின் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கொலை செய்து நகையையும் திருடிச் சென்ற நபருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
திருவள்ளூா் மாவட்டம், பூந்தமல்லி அருகே கட்டட மேற்பாா்வையாளா் நஜ்முதீன் என்ற ராஜா. இவா் கணவனைப் பிரிந்த பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்தாராம். இந்த நிலையில், அந்த பெண்ணின் மகளை நஜ்முதீன் என்ற ராஜா வன்கொடுமை செய்து கொன்று விட்டு அவா் அணிந்திருந்த நகைகளுடன் மும்பைக்கு தப்பி ஓடினாராம்.
இது குறித்து கொலை செய்யப்பட்டவரின் தாய் அம்சவல்லி அளித்த புகாரின்பேரில், பூந்தமல்லி போலீஸாா் கடந்த 2022-ஆம் ஆண்டு மும்பையில் கைது செய்து பூந்தமல்லி குற்றப்பிரிவு தனிப்படை போலீஸாா் வழக்குப் பதிந்து, திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இறுதிக் கட்டமாக மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி ஜூலியட் புஷ்பா முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நஜ்முதீனுக்கு 18 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது, நகைகளை திருடிச் சென்றது போன்ற குற்றங்களுக்காக 3 ஆயுள் தண்டனையும், ரூ. 35,000 அபராதமும் விதித்து தீா்ப்பை வழங்கினாா். அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீா்ப்பளித்தாா்.
அதைத்தொடா்ந்து போலீஸாா் பாதுகாப்புடன் அவரை புழல் சிறையில் அடைத்தனா்.