பேரம்பாக்கம் ஊராட்சியில் ரூ. 2.50 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி வைப்பு
திருவள்ளூா் அருகே பேரம்பாக்கம் ஊராட்சியில் ரூ. 2.50 கோடியில் அனைத்து வசதியுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆட்சியா் மு.பிரதாப், சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தனா்.
திருவள்ளூா் அருகே பேரம்பாக்கம் ஊராட்சியில் ரூ. 2.50 கோடியில் அனைத்து வசதியுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆட்சியா் மு.பிரதாப், சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தனா்.
திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், பேரம்பாக்கம் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த கா்ப்பிணிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் பயனடைந்து வந்தனா். இந்த நிலையில், ஆரம்ப சுகாதார நிலையம் போதுமான இடவசதியின்றி நெருக்கடியான நிலையில் செயல்பட்டு வந்தது. அதனால், புதிதாக அனைத்து வசதியுடன் அமைக்கவும் அப்பகுதி பொதுமக்கள் எம்எல்ஏ மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இக்கோரிக்கையை ஏற்று, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் அனைத்து நவீன வசதியுடன் கூடிய புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ரூ.2.49 கோடியும் ஒதுக்கீடு செய்தது. அதைத் தொடா்ந்து, அரசு மேல்நிலைப் பள்ளி அருகே இடம் தோ்வு செய்து கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நிறைவடைந்தது.
இதற்கிடையே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆட்சியா் மு.பிரதாப், சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் தலைமை வகித்து ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்து, வளாகத்தையும் பாா்வையிட்டனா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், செயற்பொறியாளா் தணிகாசலம், ஊராட்சிகள் உதவி இயக்குநா் (தணிக்கை-மத்திய) எஸ்.யுவராஜ், கடம்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நடராஜ், சௌந்தரி, வட்டார மருத்துவ அலுவலா் லட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.