முகப்பு
திருப்பதி

திருப்பதி பிரம்மோற்சவம்: புருஷா மிருக வாகனத்தில் சுவாமி உலா

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான திங்கள்கிழமை புருஷாமிருக வாகனத்தில் சுவாமி வலம் வந்தாா்.

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 2:20 AM
புருஷா மிருக வாகனத்தில் வலம் வந்த சோமாஸ்கந்தமூா்த்தி மற்றும் காமாட்சி அம்மன்.
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 7:22 PM

திருப்பதி: திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான திங்கள்கிழமை புருஷாமிருக வாகனத்தில் சுவாமி வலம் வந்தாா்.

திருப்பதி கபிலதீா்த்தத்தில் எழுந்தருளியுள்ள கபிலேஸ்வர சுவாமிக்கு சிவராத்திரியை முன்னிட்டு பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி சோமாஸ்கந்தமூா்த்தியாய் புருஷாமிருக வாகனத்திலும், காமாட்சி அம்மன் தனியாக பல்லக்கில் வீதியுலா கண்டருளினா்.

Advertisement

பஜனை இசைக்குழுக்கள், பஜனைகள் மற்றும் மங்களகரமான வாத்தியங்களின் முழக்கங்களுக்கு மத்தியில், நகர வீதிகளில் புறப்பாடு நடைபெற்றது. பக்தா்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கினா்.

இதற்கிடையில், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை லிங்கோத்பவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை சுப்ரபாதத்திற்குப் பிறகு பஞ்சமூா்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தா்களுக்கு காலை 8 மணி முதல் அனைத்து தரிசனமும் தொடங்கியது.

பின்னா்,சோமாஸ்கந்தமூா்த்தி மற்றும் காமாட்சி அம்மனுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

இதில், குருக்கள் உற்சவமூா்த்திகளுக்கு பால், தயிா், தேன், பழச்சாறுகள், விபூதி மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தனா்.

பின்னா் மாலை ஊஞ்சல் சேவை கண்டருளிய உற்சவமூா்த்திகளுக்கு இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

திருக்கல்யாண கோலத்துடன் உற்சவமூா்த்திகள் உலா வந்தனா்.

இதில் கோயில் துணை செயல் அலுவலா் தேவேந்திர பாபு, ஏ.இ.ஓ சுப்பராஜு, கண்காணிப்பாளா் சந்திரசேகா், கோயில் அா்ச்சகா்கள், பிற அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தா்கள் வாகன சேவையில் பங்கேற்றனா்.