முகப்பு
திருவண்ணாமலை

மரத்தடியில் பயிலும் மாணவர்கள்! நூற்றாண்டை கடந்த பள்ளிக்கு கட்டட வசதி இல்லை

வெம்பாக்கம் அருகே மாமண்டூரில், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், போதிய கட்டட

திருவண்ணாமலை

மரத்தடியில் பயிலும் மாணவர்கள்! நூற்றாண்டை கடந்த பள்ளிக்கு கட்டட வசதி இல்லை

வெம்பாக்கம் அருகே மாமண்டூரில், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், போதிய கட்டட

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:41 PM
பகிர்:

வெம்பாக்கம் அருகே மாமண்டூரில், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், போதிய கட்டட வசதி இல்லாததால், மாணவர்கள் மரத்தடியின் கீழ், மண் தரையில் அமர்ந்து பயிலும் அவலம் தொடர்கிறது.
மாமண்டூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கடந்த 12.11.1914-இல் தொடங்கப்பட்டது. இங்கு 1 முதல் 5ஆம் வகுப்பு வரை, சுமார் 300 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறை வசதி இல்லை. 6 வகுப்பறை கட்டடங்களில், பழைமையான 3 கட்டடங்களில் சீமை ஓடுகளால் வேயப்பட்ட மேற்கூரை, கதவு, ஜன்னல் ஆகியவை பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகின்றன. இவை, எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.
எனவே, பாதுகாப்பான வகுப்பறை வசதி இல்லாததால், 2, 3ஆம் வகுப்பு மாணவர்களை அருகிலுள்ள மரத்தடியில் மண் தரையில் அமர வைத்து,
ஆசிரியர்கள் பாடம் நடத்தும் அவலம் நிலவுகிறது.
ஆனால், மழைக் காலத்தில் அனைத்து மாணவ, மாணவிகளையும் நீர் ஒழுகும் வகுப்பறைகளில் அமர வைத்து கல்வி கற்பிப்பது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாகவே உள்ளது.
தவிர, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இங்கு ஆசிரியர்கள் இல்லை. 9 ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டிய இப் பள்ளியில்,
5 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிவதாகக் கூறப்படுகிறது. மேலும், கழிவறைகள் சேதமடைந்து, சுகாதாரமற்று கிடப்பதால், மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
அச்சுறுத்தும் கட்டடங்கள் மற்றும் அடிப்படை வசதி குறைபாடுகளுடன் இயங்கும் இப்பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பவே பெற்றோர் தயக்கம் காட்டும் நிலை உள்ளது.
இப்பள்ளியின் சேதமடைந்த கட்டடங்களை அகற்றி, புதிய கட்டட வசதி செய்து தரக் கோரி, பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் மற்றும் முதல்வர் முதல் ஆட்சியர் வரை மனுக்கள் அளித்தும் பலனில்லை எனக் கூறப்படுகிறது.
இனியாவது மாணவர்களின் நலன்
கருதி, இப் பள்ளியில் சேதமடைந்த கட்டடங்களை அகற்றி, கூடுதல் வகுப்பறை வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதுடன், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கவும் கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →