சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் எம்.ஜெயசீலன் தலைமை வகித்தார். பொது சுகாதாரத் துறை ஆய்வாளர் சங்கத் தலைவர் டி.ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
நிர்வாகிகள் ஏ.பாஸ்கரன், எம்.சரவணன், டி.அசோகர், பி.கே.ஹரிகிருஷ்ணன், வி.பிரபாகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், ஒரு சுகாதார துணை மையத்துக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் என்ற விகிதத்தில் பணியிடங்களை
உருவாக்கி, பணி நியமனம் செய்ய வேண்டும். சுகாதார ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பதவி உயர்வு பணிகளை மட்டுமே ஒதுக்க வேண்டும்.
டெங்கு களப் பணியில் உள்ள பிரச்னைகளை முறைப்படுத்த வேண்டும். களப் பணி நேரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். முன்னிரவு வரை தொடரும் ஆய்வுக் கூட்டங்களை முறைப்படுத்தி பணி நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், திருவண்ணாமலை மாவட்ட சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.