திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் பிரம்ம பாகத்தில் அஷ்டபந்தன மருந்து பெயர்த்தது தொடர்பாக புகார் அளித்த அகில இந்திய இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளிடம் திங்கள்கிழமை போலீஸார் விசாரணை நடத்தினர்.
அருணாசலேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற்றது. ஓரிரு மாதங்களிலேயே அஷ்டபந்தனம் பெயர்ந்தது. அஷ்டபந்தன மருந்துடன் சேர்த்து வைக்கப்பட்ட விலை உயர்ந்த நகைகளை திருடப்பட்டதாக அகில இந்திய இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் செஞ்சி ராஜா, கட்சியின் ஆன்மிகப் பேரவையின் மாநிலத் தலைவர் வேதபுரி கண்ணப்பன் சுவாமிகள், தேசிய அமைப்பாளர் வராகி சுந்தர் சுவாமிகள், ஊடகப் பிரிவுச் செயலர் தங்கராஜ், மாநில அமைப்புச் செயலர் சோலை ஆகியோரிடம் திங்கள்கிழமை
திருவண்ணாமலை நகரக் காவல் ஆய்வாளர் விஜயகுமார் விசாரணை நடத்தினார்.
அப்போது, அஷ்டபந்தனம் பெயர்ந்தது தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிக்கொணர வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை வாக்கு மூலமாகப் பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் விஜயகுமார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.