காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரி, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டுப் போராட்டக் குழுவினர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அண்ணா சிலை எதிரே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு ஜல்லிக்கட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராகவன் தலைமை வகித்தார். இளந்தளிர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆர்.டி.பிரகாஷ், தர்னா போராட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
போராட்டத்தின்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். திருவண்ணாமலையை அடுத்த கவுத்திமலை, வேடியப்பன் மலைகளில் தனியார் நிறுவனம் மூலம் இரும்புத் தாது வெட்டி எடுக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில், ஜல்லிக்கட்டு போராட்டக்குழு இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.