செய்யாறை அடுத்த குத்தனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு தலைமை வகித்து மருத்துவர் என்.ஈஸ்வரி பேசியதாவது:
டெங்கு வைரஸ் கிருமியால் ஏற்படும் ஒரு வகை காய்ச்சலாகும். இது ஏடிஸ் கொசுக்களின் மூலம் பரவுகிறது. உடல் நடுக்கத்துடன் கூடிய காய்ச்சல், மயக்கம், வாந்தி, பசியின்மை, வயிற்று வலி, மூச்சிவிட சிரமம் ஏற்படுதல், வாய், பல் ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
டெங்கு காய்ச்சல் கண்டவர்கள் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்றார். முகாமுக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் கே.சம்பத், ஆரம்ப சுகாதாரத் துறையினர் செய்திருந்தனர்.