குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது
குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதாக திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மகிழேந்தி வேதனை தெரிவித்தார்.
குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதாக திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மகிழேந்தி வேதனை தெரிவித்தார்.
சேத்துப்பட்டு - செஞ்சி சாலையில் உள்ள திவ்யா பாலிடெக்னிக் கல்லூரி 10-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரித் தாளாளர் பா.செல்வராஜன் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் செந்தில்குமார், துணைத் தலைவர் பிரவின்குமார், நிர்வாக அலுவலர் சீனிவாசராகவன், முதன்மை நிர்வாக அலுவலர் பிரதாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் முருகன் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான மகிழேந்தி கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்து மாணவர்களிடையே பேசியதாவது:
தொழில் கல்வி படிக்கும் மாணவர்களாகிய நீங்கள் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும். பெண்களுக்கு எதிரான குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டம் கல்வியில் 23-ஆவது இடத்தில் உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றார்.
விழாவில், துணை நீதிபதி ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு நீதிபதிகள் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.