பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம் விநியோகம்
குழந்தை கடத்தல் தொடர்பாக, வந்தவாசியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை போலீஸார் விநியோகித்தனர்.
குழந்தை கடத்தல் தொடர்பாக, வந்தவாசியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை போலீஸார் விநியோகித்தனர்.
வட மாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்துவதாக பரவிய வதந்தியால், அப்பாவிகள் மீது ஆங்காங்கே தாக்குதல் நடத்தப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையொட்டி, இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்பதை வலியுறுத்தும் வகையில், வந்தவாசி புதிய பேருந்து நிலையம், ஐந்து கண் பாலம், தேரடி ஆகிய இடங்களில் வந்தவாசி தெற்கு போலீஸார் துண்டு பிரசுரங்கள் அண்மையில் விநியோகித்தனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் வரதராஜ் தலைமையிலான வந்தவாசி தெற்கு போலீஸார் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனர். மேலும், சந்தேகப்படும்படியான நபர்கள் தென்பட்டால் அருகே உள்ள காவல் நிலையத்துக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டனர்.