செய்யாறில் உள்ள அம்மா உணவகத்தில் சுகாதாரமான உணவு வழங்க வேண்டும் என்று அங்குள்ள பணியாளர்களிடம் எம்எல்ஏ தூசி கே.மோகன் அறிவுறுத்தினார்.
செய்யாறு சந்தைப் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் எம்எல்ஏ தூசி கே.மோகன் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, காலை சிற்றுண்டி என்னென்ன வழங்கப்படுகின்றன என கேட்டறிந்ததுடன், அங்கு சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டு உணவின் தரத்தையும் ருசியையும் பரிசோதித்து பார்த்தார். தொடர்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படும் உணவுகளை சுகாதாரமாகவும், சுவையாகவும் வழங்க வேண்டும் என அங்கிருந்த பணியாளர்களிடம் எம்எல்ஏ தூசி கே.மோகன் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, நகராட்சி ஆணையாளர் சி.ஸ்டான்லிபாபு, நகராட்சிப் பொறியாளர் எட்வின் பிரைட் ஜோஸ், துப்புரவு அலுவலர் எஸ்.பாலசுப்பிரமணியன், சிவானந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.