முகப்பு
திருவண்ணாமலை

வேளாண் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: காவல் துறைக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

திருவண்ணாமலை அருகே வேளாண் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் வழக்குப் பதிவு

Updated On : 3 செப்டம்பர், 2018 at 6:43 AM
பகிர்:

திருவண்ணாமலை அருகே வேளாண் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யாமல் காலம் கடத்தி வருவதாக காவல் துறைக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்தது.
திருவண்ணாமலை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சி நிர்வாகி கே.குமரேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், எம்.பிரகலநாதன், பி.செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக் குழு உறுப்பினர் என்.பாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், தண்டராம்பட்டை அடுத்த வாழவச்சனூர் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படும் பேராசிரியர் தங்கபாண்டியன், இதற்குத் துணையாக இருந்த உதவிப் பேராசிரியைகள் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
இந்த சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்யாமல் காவல் துறை காலம் கடத்துவதை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த விவகாரத்தில் போலீஸார் உடனடியாக வழக்குப் பதிந்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவியை விடுதியில் இருந்து வெளியேற்றி உத்தரவிட்ட பல்கலைக்கழக குழுவின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். மாணவியை மீண்டும் விடுதியில் சேர்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியிடம் பல்கலைக்கழக ஒழங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தி, இந்த சம்பவத்தில் தொடர்புடையோர் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவிகளின் விடுதி அறைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், மாணவிகள் அச்சமின்றிப் படிக்க அரசு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் பி.கண்ணன், பாரி, டி.கே.வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.