செங்கத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட தனியார், அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனுடைய மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் செங்கத்தில் நடத்தப்பட்டது.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) அன்பழகி வரவேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர் சுப.கோவிந்தராஜன், மாற்றுத் திறனாளிகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர், வட்டார ஒருங்கிணைப்பாளர் சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செங்கம் கல்வி மாவட்ட அலுவலர் வெங்கட்ராமன் கலந்துகொண்டு முகாமை தொடக்கிவைத்ததுடன், மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கலந்துகொண்டு மாற்றுத் திறனுடைய மாணவர்களுக்கு கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்டவைகளை பரிசோதனை செய்து, அடையாள அட்டைகளை வழங்கினர்.
முகாமில் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். ஆசிரியர் பயிற்றுநர் செந்தில் நன்றி கூறினார்.