முகப்பு
திருவண்ணாமலை

விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டம்: இன்று முதல் 3 நாள்களுக்கு மனுக்கள் அளிக்கலாம்

பிரதமர் கிசான் சம்மான் நிதியுதவி அளிக்கும் திட்டத்தில் ரூ. 6 ஆயிரம் பெற மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள்

Updated On : 25 பிப்ரவரி 2019, 8:45 am IST
பகிர்:

பிரதமர் கிசான் சம்மான் நிதியுதவி அளிக்கும் திட்டத்தில் ரூ. 6 ஆயிரம் பெற மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் திங்கள்கிழமை (பிப். 25) முதல் புதன்கிழமை (பிப். 27) வரை மனுக்களை அளிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமர் கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேருக்கு குறைவாக சாகுபடி நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக வழங்க ஆணையிடப்பட்டது. முதல் தவணையாக ரூ. 2 ஆயிரத்தை வழங்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த ஏதுவாக வட்டம், வட்டாரம், பிர்கா, கிராம வாரியாக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தகுதியான சிறு, குறு விவசாயிகள் விவரம் கணக்கிடப்பட்டு பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறத் தகுதியான விவசாயிகள், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை அணுகி, உரிய விண்ணப்பத்தைப் பெற்று, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கிக் கணக்குப் புத்தக முதல் பக்க நகல், நில ஆவணங்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து பயன் பெறலாம்.
இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் தகுதியான விவசாயிகளிடமிருந்து பெற பிப்ரவரி 25, 26, 27-ஆம் தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இந்த நாள்களில் தகுதியான அனைத்து விவசாயிகளும் உடனே சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன் பெறலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.