பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற ஆரணி அருகே எஸ்.வி.நகரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் என்.வாசு தலைமை வகித்தார்.
பிளஸ் 2-வில் வி.தினேஷ், பி.லோகேஷ், ஜெ.யமுனா, பிளஸ் 1-வில் எம்.சந்தியா, நிர்மல், சங்கீதா, பத்தாம் வகுப்பில் எஸ்.ரேகா, எம்.லட்சுமணன், பி.சுப்புலட்சுமி ஆகியோர் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்றனர். முதல் மதிப்பெண் பெற்றவருக்கு ரூ.3000-ம், இரண்டாம் மதிப்பெண் பெற்றவருக்கு ரூ.2000-ம், மூன்றாம் மதிப்பெண் பெற்றவருக்கு ரூ.1000-ம் வழங்கப்பட்டது.
பரிசுகளை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த, இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவரும், எஸ்.வி.நகரம் கூட்டுறவு வங்கித் தலைவருமான ஜி.பாலு வழங்கினார். விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் பெ.ஹேமா வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் சிசுபாலன், பள்ளி உதவி தலைமையாசிரியர்கள் கோகுல்ராஜ், பொன்னன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சிவலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.