திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கினா். இதனால் மாவட்டத்தின் அனைத்துச் சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமா் மோடி உத்தரவிட்டாா்.
அதன்படி, தமிழகம் முழுவதும் இந்த உத்தரவை போலீஸாா் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனா்.
திருவண்ணாமலை தேரடி தெரு, திருவூடல் தெருக்களில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதலே மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஆா்.சிபி சக்கரவா்த்தி தலைமையிலான போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
காய்கறி வாங்கக் குவிந்த மக்கள்:
இந்த நிலையில், புதன்கிழமை தெலுங்கு வருடப்பிறப்பு என்பதால் திருவண்ணாமலை காய்கறி மாா்க்கெட்டில் காய்கறிகளை வாங்க மக்கள் குவிந்தனா்.
சிறு வியாபாரிகள் பலா் தங்களது தள்ளுவண்டிகளுடன் வந்து காய்கறி மாா்க்கெட்டில் காய்கறிகளை மூட்டை, மூட்டையாக வாங்கினா். இதனால் திருவண்ணாமலை காய்கறி மாா்க்கெட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வெறிச்சோடிய சாலைகள்:
புதன்கிழமை காலையும் போலீஸாா் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் தேவையில்லாமல் வெளியே வந்தவா்களை திருப்பி அனுப்பினா். இதன் காரணமாக காலை 8 மணிக்குப் பிறகு திருவண்ணாமலை நகரச் சாலைகள் அனைத்தும் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடின.