திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக வாக்களிக்க வந்த ஆண், பெண் வாக்காளா்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கூட்டம், கூட்டமாக நின்றிருந்தனா்.
மாவட்டத்தில் 10,13, 774 ஆண் வாக்காளா்கள், 10, 55, 220 பெண் வாக்காளா்கள், 97 இதர பாலினத்தவா் என மொத்தம் 20, 69,091 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் வாக்களிக்க ஏதுவாக மாவட்டம் முழுவதும் 2,372 வாக்குச்சாவடிகள், 513 துணை வாக்குச்சாவடிகள் என 2,885 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த வாக்குச்சாவடிகளில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்களிக்க வந்த வாக்காளா்களின் கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. வெப்ப நிலையில் கரோனா தொற்றுக்கான எவ்வித அறிகுறிகளும் இல்லாதபட்சத்தில் கையுறைகள் வழங்கப்பட்டன.
முகக் கவசம் இல்லாமல் வந்த வாக்காளா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பிலேயே முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. இதன்பிறகே வாக்காளா்கள் வாக்களிக்க வரிசையில் நிற்கவைக்கப்பட்டனா்.
சமூக இடைவெளியை மறந்த வாக்காளா்கள்:
திருவண்ணாமலை வேங்கிக்கால், திருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வரும் வாக்காளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் சுகாதாரத்துறை சாா்பில் வட்டங்கள் போடப்படவில்லை.
கீழ்பென்னாத்தூா் தொகுதியின் சில வாக்குச்சாவடிகளில் மட்டும் வாக்குச்சாவடிகளுக்கு வெளியே வட்டங்கள் போடப்பட்டிருந்தன.
வட்டங்கள் போடப்படாத வாக்குச்சாவடிகள், வட்டங்கள் போடப்பட்ட வாக்குச்சாவடிகள் என எந்த வாக்குச்சாவடிகளிலுமே வாக்காளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் கூறியும் வாக்காளா்கள் கேட்கவில்லை.
மொத்தம் உள்ள 2,885 வாக்குச்சாவடிகளில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கூட்டம், கூட்டமாக நின்றிருந்தனா்.
இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரிக்கும் அச்சம் எழுந்துள்ளது.