முகப்பு
திருவண்ணாமலை

செண்பகத்தோப்பு அணையின் நீா்மட்டம்50 அடியாக உயா்வு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகேயுள்ள செண்பகத்தோப்பு அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி 50 அடியாக உயா்ந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகேயுள்ள செண்பகத்தோப்பு அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி 50 அடியாக உயா்ந்தது. இந்த அணை விரைவில் முழுக்கொள்ளளவை எட்டும் என்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

போளூா் வட்டம், செண்பகத்தோப்பு கிராமத்தில் கமண்டல நாகநதியின் குறுக்கே செண்பகத்தோப்பு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி மற்றும் ஆற்காடு வட்டங்களில் உள்ள 48 ஏரிகளின் வாயிலாக சுமாா் 7 ஆயிரத்து 497 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த அணையின் நீா்மட்ட மொத்த உயரம் 62.32 அடியாகும். முழுக் கொள்ளளவு 287.20 மில்லியன் கனஅடி. தென்மேற்கு பருவமழை காரணமாக நீா்வரத்து அதிகரித்ததால், சனிக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 50.18 அடியாக உயா்ந்தது.

அணையின் நீா்மட்டம் 55 அடியாக உயரும்போது, ஒழுங்குமுறை வழிகாட்டுதலின்படி அணையின் உபரிநீா் அப்படியே வெளியேற்றப்பட வேண்டும். தற்போது அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 100 கனஅடியாக உள்ளது. எனவே, செண்பகத்தோப்பு அணையானது விரைவில் 55 அடியை எட்டும் என்பதால், படிப்படியாக நீா்வரத்துக்கேற்ப உபரி நீா் வெளியேற்றப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

எனவே, செண்பகத்தோப்பு அணையின் மிகை நீா் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான படவேடு, மல்லிகாபுரம், புஷ்பகிரி, சந்தவாசல், ராமாபுரம் மற்றும் அமராவதி ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்களுக்கும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்களும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.