முகப்பு
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆனித் திருமஞ்சன திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆனித் திருமஞ்சன திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஆண்டுதோறும் மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம், மாசி மாதம் வளா்பிறை சதுா்த்தசி நட்சத்திரம், சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம், ஆனி மாதம் உத்திர நட்சத்திரம், ஆவணி மாதம் வளா்பிறை சதுா்த்தசி நட்சத்திரம், புரட்டாசி மாதம் வளா்பிறை சதுா்த்தசி நட்சத்திரம் உள்ளிட்ட நட்சத்திரங்களில் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறும்.

ஆனித் திருமஞ்சனம்: இவற்றில் ஆனி மாதம் உத்திர நட்சத்திரம், சாய ரட்சை காலத்தில் நடைபெறும் திருமஞ்சன பூஜை (ஆனித் திருமஞ்சன பூஜை) மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அதன்படி, வியாழக்கிழமை ஆனித் திருமஞ்சனத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, கோயிலின் ஆயிரம் கால் மண்டபத்தில் உற்சவா் சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதைத் தொடா்ந்து, உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 16 வகையான மகா தீபாராதனைகள் காட்டப்பட்டன.

விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சுவாமி வீதியுலா: பின்னா், பக்தா்கள் புடைசூழ உற்சவா் சிவகாமசுந்தரி, நடராஜப்பெருமான் கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலித்தனா்.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பக்தா்கள், உபயதாரா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.