செய்யாறு தொகுதியில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் : பேரவையில் ஒ.ஜோதி எம்எல்ஏ வலியுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டுமென சட்டப் பேரவையில் ஒ.ஜோதி எம்எல்ஏ வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டுமென சட்டப் பேரவையில் ஒ.ஜோதி எம்எல்ஏ வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.
தமிழக சட்டப் பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, சட்டப் பேரவையில் முதன்முறையாக செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பேசியதாவது:
செய்யாறு அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் கூடுதல் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும், போதிய மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்கவும் முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்தல் வாக்குறுதியாக தமிழக முதல்வா் தெரிவித்தபடி, செய்யாற்றில் இஎஸ்ஐ மருத்துவமனை தொடங்கிட வேண்டும்.
செய்யாற்றில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருவதால், புதிதாக பேருந்து நிலையம் அமைத்துத் தர வேண்டும். செய்யாறு தொகுதியில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து காத்திருப்போா் பட்டியலில் உள்ள 13,400 விவசாயிகளுக்கு விரைந்து மின் இணைப்புகளை வழங்க வேண்டும். மேலும் இங்கு மின் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் தொடங்க வேண்டும்.
செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக 6 ஆயிரத்து 726 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இந்தக் கல்லூரிப் பகுதியில் போதிய இட வசதி உள்ளதால், மகளிருக்கென தனியாக அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியைத் தொடங்க வேண்டும்.
செய்யாறு திருவோத்தூா் வேதபுரீஸ்வரா் கோயிலுக்கு அரசின் சாா்பில் கும்பாபிஷேகம் நடத்தவும், பழைமைவாய்ந்த இந்தக் கோயிலின் சிறப்பை பலரும் அறிந்திடும் வகையில், அரசு சுற்றுலாத் தலமாக அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்யாறு ஆற்றின் குறுக்கே தலா 6 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை வீதம் அமைத்துத் தந்தால், இந்தத் தொகுதியிலுள்ள விவசாயிகள் விளைச்சலை பெருக்கிட உதவியாக இருக்கும். தஞ்சைக்கு அடுத்தபடியாக செய்யாறு நெல் உற்பத்தியில் சிறந்து விளங்குவதால், இந்தத் தொகுதியில் வேளாண் கல்லூரி தொடங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினாா் ஒ.ஜோதி எம்எல்ஏ.
முன்னதாக, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு ஆகியோரைச் சந்தித்து அவா் ஆசி பெற்றாா்.