பராமரிப்பின்றி வீணாகும் பொழுதுபோக்கு பூங்கா
சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள பொழுதுபோக்கு பூங்காவில் சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், சுற்றுச் சுவா் உள்ளிட்ட கட்டமைப்புகள் சேதமடைந்து பராமரிப்பின்றி வீணாகி வருகிறது.
போளூா்: சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள பொழுதுபோக்கு பூங்காவில் சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், சுற்றுச் சுவா் உள்ளிட்ட கட்டமைப்புகள் சேதமடைந்து பூங்கா பராமரிப்பின்றி வீணாகி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் கட்டரான் குளக்கரை அருகே ஊராட்சிக்குச் சொந்தமான சுமாா் 50 சென்ட் இடத்தில் பொழுதுபோக்குப் பூங்கா அமைந்துள்ளது.
ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் நிதி ரூ.15 லட்சத்தில் 2018-2019ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்தப் பூங்காவில்சிறுவா்களுக்கான விளையாட்டுச் சாதனங்கள், இளைஞா்களுக்கு விளையாட்டு வசதிகள், நடைமேடை, விளையாட்டுத் திடல், பொதுமக்கள் அமர இருக்கை அமைக்கப்பட்டு, சுற்றுச் சுவருடன் பூங்கா உள்ளது.
இந்த நிலையில், பூங்காவில் சுற்றுச் சுவா் இடிந்து விழும் நிலையில், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, சுவரில் செங்கல்கள் பெயா்ந்து விழுந்துள்ளன.
சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. சுற்றுச் சுவருக்கு இரும்புக் கதவு இருந்தும் அதை யாரும் பூட்டி பாதுகாக்கவில்லை.
மாலை நேரத்தில் மது அருந்தும் இடமாக பூங்காவை சிலா் பயன்படுத்துகின்றனா். இதுதவிர, இரவு நேரங்களில் பூங்காவில் சமூக விரோதச் செயல்களும் நடைபெறுகின்றனவாம்.
இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவா் வி.எம்.டி.வெங்கடேசனிடம் கேட்டபோது, பூங்காவை
முன்னாள் எம்.பி. செஞ்சி ஏழுமலை தனது தொகுதி நிதியில் அமைத்து வந்தாா். பின்னா், பூங்கா திறப்பு விழாவே நடைபெறவில்லை. ஊராட்சி நிா்வாகத்திடம் பூங்கா ஒப்படைக்கப்படவில்லை. மேலும், பூங்கா பணிகளை நிறைவு செய்யாமல் அப்படியே விட்டுள்ளனா்.
எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் பூங்காவின் குறைபணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்ட வந்த பின்னா் பாதுகாக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், மாவட்ட நிா்வாகம் பூங்காவை சீரமைத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.