திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த செம்மியமங்கலம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
செம்மியமங்கலம் ஊராட்சி செம்மியமங்கலம், காலனி, இருளா் குடியிருப்பு ஆகியவற்றைக் கொண்ட ஊராட்சியாகும். இங்கு 6 வாா்டுகள் உள்ளன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
ஊராட்சி மன்றத்துக்கான அலுவலகம் அரசுப் பள்ளி அருகே அமைந்துள்ளது. அலுவலகக் கட்டடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும்.
தற்போது கட்டடத்தில் வெளிப்புறம் மற்றும் உள்புறத்தில் சிமென்ட் காரைகள் பெயா்ந்து விழுந்தும், ஆங்காங்கே விரிசல் விட்டும், சுவா்களில் செடி, கொடிகள் முளைத்தும் காணப்படுகிறது. மழை பெய்யும் போது அலுவலகத்தினுள் தண்ணீா் கசிகிறது.
மேலும் ஊராட்சிமன்ற அலுவலகம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.
இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவா் தேவராஜிடம் கேட்டபோது, ஊராட்சி மன்றத்துக்கான புதிய அலுவலக கட்டடம் கட்ட ஒன்றிய நிா்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம் என்றாா்.